நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு கீழே விழுந்து உயிரிழப்பு


நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு கீழே விழுந்து உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 April 2024 2:29 AM GMT (Updated: 8 April 2024 6:44 AM GMT)

நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

குமரி,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பெனடிக்ட் (வயது 40). இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஷிபா(34) என்ற மனைவியும், 9 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த 4-ந்தேதி மதியம் பெனடிக்ட் ஊரம்பில் இருந்து நடைக்காவு பகுதி வழியாக தனது மோட்டாா் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். நடைக்காவு அடுத்த அருவுபொற்றை பகுதியில் சென்றபோது ஒரு நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நிலைதடுமாறிய பெனடிக்ட் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் ஓடையில் விழுந்தார்.

இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பெனடிக்ட் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெனடிக்ட்டின் மனைவி ஷிபா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story