கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண்முன்னே பலியான பரிதாபம்


கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண்முன்னே பலியான பரிதாபம்
x

மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

சென்னை

சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (வயது 21). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் யுவராஜ் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சினேகா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் யுவராஜூம், அவரது 11 மாத கைக்குழந்தையும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான வேலூரை சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story