'அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' - ஓ.பன்னீர்செல்வம்


அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 18 March 2023 7:01 AM GMT (Updated: 18 March 2023 8:16 AM GMT)

அ.தி.மு.க. இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும் 26-ந்தேதி நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், "பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அணி மீது அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். அ.தி.மு.க. இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு" என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.



Next Story