எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்: பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.
'பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை' என்று டி.ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். பாஜக துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகியது.
இந்த சூழ்நிலையில் பாஜக பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக-பாஜக இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பாஜக கூட்டணியில் அதிமுக நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அதிமுக நிர்வாகிகள் பலருக்கு பாஜகவுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.