சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்


சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து நாளையும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இன்று (03.03.2024), தென்னக ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மதியம் 03.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிராட்வேயிலிருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தி.நகரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.


Next Story