நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருவள்ளூர்

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி உஷா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை சீமாபுரம் கிராமத்தின் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றுக்கு நண்பர்கள் 4 பேருடன் சென்றார்.

பின்னர் அவர்கள் அற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராஜா திடீரென நீரில் மூழ்கினார். வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் பதட்டம் அடைந்த நண்பர்கள் அற்றின் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நள்ளிரவு வரை தேடியும் கண்டுப்பிடிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் ஆற்றில் ஆழமான பகுதிகள் சிக்கிக்கொண்ட ராஜாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story