வெப்ப அலை எதிரொலி: அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்


வெப்ப அலை எதிரொலி: அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்
x

கோப்புப்படம் 

கோவையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென அம்மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீட்டில் ஏசி, பேன் இல்லாமல் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. கோவையில் 102 பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோவை மக்களுக்கு கலெக்டர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.04.2024 நாளிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அறிவுறுத்தியுள்ளார்.



Next Story