கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 'பலே ஆசாமி' கைது


கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பலே ஆசாமி கைது
x

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ‘பலே ஆசாமி’ கைது செய்யப்பட்டார்.

சென்னை

மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா (வயது 49) என்பவர் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் மூலக்கடையை சேர்ந்த பாலாஜி (39) என்பவர் உடல் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த 2 சம்பவங்களும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் அதே ஆண்டு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்த முனியசாமி (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த முனியசாமி போலீஸ் நிலையத்திலேயோ நீதிமன்றத்திலோ ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தலைமறைவான முனியசாமியை பிடிக்க கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் நேற்று மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே சுத்தித்திரிந்த முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story