பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான் - செல்லூர் ராஜூ பேட்டி


பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான் - செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 12 May 2023 7:18 AM GMT (Updated: 12 May 2023 8:07 AM GMT)

பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர். கெட்டுள்ளார். இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர்.

நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள். ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க. மட்டும் தான்.

பா.ஜ.க.வும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை. எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story