தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி


தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி
x

தி.மு.க. அரசு தனது பொதுக்கூட்ட உரையை சட்டமன்றத்தில் கவர்னர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உணர்வு ரீதியான பிரச்சினை

தமிழக சட்டசபையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக கவர்னரின் உரை வாசிக்கப்படும்போது, தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்ற சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக கவர்னரை எதிர்த்து கோஷமிட்டனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடனும் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னர், தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது.

கவர்னருக்கு கண்டனம் தெரிவிக்கும் சற்று முன்புவரை, தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தின் முகப்பிலே இருந்த வாசகம் "தலை நிமிருது தமிழகம், மனம் குளிருது தினம் தினம்". ஆனால் அவசர, அவசரமாக இந்த வாசகத்தை மாற்றி "தைத்திங்களில் தமிழர் பெருமை" என்ற பொருளற்ற வாசகத்தை பொறுத்தி இருக்கின்றார்கள்.

தி.மு.க. அரசு தன் குறைகளை எல்லாம் மறைக்க மக்களை திசை திருப்ப இப்படி உணர்வு ரீதியான பிரச்சினையை கிளப்புவது வாடிக்கையே. மக்களின் எதிர்ப்பினை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சி திட்டமிட்டு இந்த தமிழகம், தமிழ்நாடு என்ற புது பிரச்சினையை கிளப்புகிறது.

தி.மு.க. பொதுக்கூட்ட உரை

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சி இதுவரை கடந்து வந்த பாதையின் விளக்கத்தையும், இனி செய்ய இருக்கும் திட்டங்களின் முன் அறிவிப்புகளையும், ஆளும் கட்சியினர் எழுதி, கவர்னரிடம் கொடுத்து படிக்க சொல்வது மரபு. சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.என்.ரவி வாசித்த கவர்னர் உரை என்பது தி.மு.க. அரசால் எழுதி வழங்கப்பட்ட உரையே தவிர கவர்னரின் சொந்த கருத்துகள் அதில் இடம்பெறவில்லை. கவர்னர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினரே ஆர்ப்பாட்டம் செய்தால் தங்கள் ஆட்சியை தாங்களே எதிர்ப்பதாக அமைந்துவிடும் என்ற காரணத்தால் கூட்டணி கட்சியினரை எல்லாம் தூண்டிவிட்டு, அவர்களை எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தி.மு.க. அரசு.

தி.மு.க. ஆட்சியில் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை, இனி எடுக்கப்போகும் செயல்திட்டங்களை, கவர்னர் விளக்கும்போது கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால் தி.மு.க.வை அதன் கூட்டணி கட்சியினரே எதிர்ப்பதாகத்தானே அர்த்தம் கொள்ள முடியும். அவர்களை தடுத்து கவர்னர் உரையை தடையின்றி நடத்தவேண்டிய தி.மு.க.வினர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால் பச்சை குழந்தைக்கு கூட தெரியும் தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு, மவுனமாக நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று.

தி.மு.க. அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் கவர்னர் படிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?.

வாசகம் சேர்ப்பு

கவர்னர் உரையை படித்த பிறகு முதல்-அமைச்சர் பேசுவது மரபல்ல. ஆனால் கவர்னர் அவையில் இருக்கும்போதே, கவர்னர் மாண்புக்கு மரியாதை செலுத்தாமல், ஒலிபெருக்கி வழங்கப்படாதபோதும் முதல்-அமைச்சர் பேசுவது தவறான முன்னுதாரணம். வன்மையாக கண்டிக்கத்தக்கது. கண்ணியத்துக்கு மாறாக முதல்-அமைச்சரே நடந்துகொண்டதால், கவர்னரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது. கவர்னரின் வரைவு உரை கடந்த 6-ந் தேதியன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு, அடுத்த நாள், ஜனவரி 7-ந் தேதி கவர்னர் உரையின் சில பகுதிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார். "தமிழ்நாடு தொடர்ந்து அமைதி மற்றும் அமைதியின் மாநிலமாகவும், வன்முறையில் இருந்தும் விடுபட்ட மாநிலமாகவும் உள்ளது" என்ற வாசகத்தை அரசு சேர்த்துள்ளது.

சமீபத்தில் கோவையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி நடைபெற்றதை கண்ட பிறகும், பா.ஜ.க. உறுப்பினர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் இல்லத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை கண்ட பிறகும், பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மாநிலம் முழுவதும் நடைபெறுவதை கண்ட பிறகும், சில நாட்களுக்கு முன் பெண் போலீசை, தி.மு.க.வின் இளைஞர் அணியினர் துன்புறுத்திய சம்பவத்தை கண்டு தமிழகமே அதிர்ந்த பிறகும், தமிழகத்தின் தலைமகனான கவர்னர், மக்கள் கருத்துக்கு மாறாக, தமிழகம் அமைதிப்பூங்கா என்று அவரால் எப்படி பொய்யுரைக்க முடியும்?

நடப்பது நாடகம்

அதுமட்டுமின்றி, "மாநில அரசின் முயற்சியால்தான் இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்" என்ற வாசகத்தை தமிழக அரசு சேர்த்திருந்தது. அதையும் "மாநில மற்றும் மத்திய அரசின் முயற்சியால்" என்று மாற்றவேண்டும் என்று கவர்னர் அறிவுறுத்தினார். தமிழே தெரியாத கவர்னர், தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால், நல்ல தமிழில் பேச முயற்சிக்கும்போது, தி.மு.க. அரசின் தூண்டுதலால் அதன் கூட்டணி கட்சியினர் நடந்துகொண்ட விதமும், அதை தடுக்காத ஆளும் கட்சியினரின் விஷமத்தனமான அமைதியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story