மனைவியுடன் கள்ளக்காதல்... குட்டையில் வாலிபர் உடல்.. கணவர் வெறிச்செயல்


மனைவியுடன் கள்ளக்காதல்... குட்டையில் வாலிபர் உடல்.. கணவர் வெறிச்செயல்
x

கொலையுண்ட மணியரசு மற்றும் கைதான அன்பு

மனைவியுடனான கள்ளக்காதலை துண்டிக்காததால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

குட்டையில் 30 வயது வாலிபர் ஒருவரது உடல் கிடந்தது.

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள சுப்பாயிகுட்டை கரையின் மேல்பகுதியில் நேற்று முன்தினம் காலை ரத்தக்கரை படிந்திருந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, பிரம்மதேசம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி பார்த்தனர். அப்போது, குட்டையில் 30 வயது வாலிபர் ஒருவரது உடல் கிடந்தது. அந்த உடல் மேல் பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடலை வெளியே எடுத்து பார்த்தபோது, அவரது முகம், தலை பகுதிகளில் பலத்த காயம் இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், பெருமுக்கலை சேர்ந்த ராகவன் மகன் மணியரசு(வயது 30) என்பதும், டிப்பர் லாரி டிரைவரான அவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து குட்டையில் வீசியதும், உடலின் மேல் பகுதியில் பெரிய கல்லை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மணியரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமுக்கல் சஞ்சீவி ராமன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் அன்பு(44) என்பவரை கைது செய்தனர்.

அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் லாரி டிரைவராக இருக்கிறேன். எனது மனைவி வெண்ணிலா. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது மனைவிக்கும், மணியரசுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மலர்ந்தது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணியரசு, வெண்ணிலாவுடன் தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதையடுத்து திருவண்ணாமலையில் தங்கி இருந்த வெண்ணிலாவையும், மணியரசுவையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெண்ணிலாவை, என்னுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நான், மனைவி குழந்தைகளுடன் வந்தவாசியில் வாடகை வீட்டில் குடியேறினேன். 2 நாட்களுக்கு ஒரு முறை பெருமுக்கல் கிராமத்திற்கு வருவேன். இதையறிந்த மணியரசு, வந்தவாசிக்கு சென்று வெண்ணிலாவை சந்தித்து பேசினார். இதை கண்டித்தும், அவர் கேட்கவில்லை. எனவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

அதன்படி சில நாட்களாக அவரை கண்காணித்து வந்தேன். கடந்த 17-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க குட்டைக்கு வந்த மணியரசுவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் குட்டைக்குள் மணியரசு உடலை மூழ்கடித்து, உடல் மீது பெரிய கல்லை தூக்கி வைத்து விட்டு சென்று விட்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Next Story