சென்னை கலாஷேத்ரா விவகாரம்: 2-வது நாளாக 30 மாணவிகளிடம் விசாரணை


சென்னை கலாஷேத்ரா விவகாரம்: 2-வது நாளாக 30 மாணவிகளிடம் விசாரணை
x

கல்லூரி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 4 பேர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. தலைமையிலான குழு இன்று (புதன்கிழமை) விசாரணை நடத்தியது. இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகே மாணவிகள் கல்லூரிக்கு திரும்புவர் என்பதால் இன்றே விசாரணை நடத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையில் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகள் சுதந்திரமாக தங்கள் புகார்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், கல்லூரி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி அறிக்கை விரைவில் மாநில மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story