தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

இணைந்து பயணிப்போம்; இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்! என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதுவரை தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் மேலிடம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரி அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!" என்று தெரிவித்து உள்ளார்.



Next Story