10-ம் வகுப்பு மாணவி, காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி, காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை
x

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீநிதி (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 6-ந் தேதி ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஸ்ரீநிதியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் புத்தானத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநிதியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தில் மாணவியும், வாலிபரும் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து புத்தானத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்த மாணவி ஸ்ரீநிதி என்றும், வாலிபர் அதே பகுதியை சேர்ந்த நைனான் என்ற அஜித்குமார் (19) என்றும் தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் தூக்கில் தொங்கிய மரத்திற்கு கீேழ ஒரு பெட்ஷீட் கிடந்தது. அஜித்குமார் தனது செல்போனில் ஸ்ரீநிதியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு அதில், `மிஸ் யூ ஆல் போய்ட்டு வாரேன்' என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவும் செல்போனில் இருந்தது. அதுமட்டுமின்றி ஸ்ரீநிதியின் கழுத்தில் தாலி கிடந்தது.

இதனால் ஸ்ரீநிதியும், அஜித்குமாரும் காதலித்து வந்து இருக்கலாம் என்றும், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டு, தூக்கில் தொங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story