பட்டாபிராமில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி சாவு - குளித்துவிட்டு மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் விபரீதம்


பட்டாபிராமில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி சாவு - குளித்துவிட்டு மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் விபரீதம்
x

பட்டாபிராமில் குளித்துவிட்டு ஈரக்கையுடன் மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார்.

சென்னை

ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜிநகர் மாடல் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது ஒரே மகள் சுவேதா (வயது 14). இவர் பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் சுவேதா வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று மாலை குளித்து விட்டு வந்த இவர், ஈரமான கையுடன் வீட்டில் அறையில் இருந்த மின்விளக்கை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் மாணவி சுவேதாவை பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story