தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''திருச்சி, திருவெள்ளறை பெருமாள் கோவில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கோவிலில் கிழக்கு பக்கம்தான் ராஜகோபுரம் இடம் பெறவேண்டும். ஆனால், வடக்கு பக்கம் பார்த்து ராஜ கோபுரம் கட்டப்படுகிறது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் செஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜராக வக்கீல், ''இந்த கோவில் மிகவும் பழமையானது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கட்டிடங்கள் மன்னர்களின் படை எடுப்பு காரணமாக சேதப்படுத்தப்பட்டது. பஞ்சரத்ன ஆகமப்படி எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக்கொள்ளலாம் என்று 9 ஆகம நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வடக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டப்படுகிறது. இந்த ராஜகோபுரத்தை கட்ட தனி நபர் ஒருவர் ரூ.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளார் என்று கூறினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இதுபோல பேசக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆகம விதியின்படி வடக்கு திசையில் ராஜகோபுரம் கட்டக்கூடாது என்றால், அது தொடர்பான ஆதாரங்களை 9 நிபுணர்கள் கொண்ட குழுவிடம் தாக்கல் செய்யுங்கள். இந்த ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு தடை இல்லை. பணியை தொடரலாம்'' என்று கூறினர்.

பின்னர் நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்கு தெரியாத ஆகமமா, இப்போது உள்ளவர்களுக்கு தெரியும்? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், ''1726-ம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின்படி சில கோவில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story