மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு


மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு
x

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்கமாட்டார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள இந்து மத கடவுள் சிவன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் மற்றும் சிலர் 3 இந்து மதவழிபாட்டு தலங்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிரித்தாள்வதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார். தமிழ்நாடு அரசு மதம், ஜாதி சார்ந்த அரசு அல்ல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குவதற்கு எப்படிப்பட்ட மதவாத சக்திகள் தலைதூக்குமாயினும் அந்த மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்' என்றார்.


Next Story