கணவரை பிரிந்த காதலிக்கு மீண்டும் வலை விரித்த இளைஞர் - பேச மறுத்ததால் கத்தியால் குத்திய கொடூரம்


கணவரை பிரிந்த காதலிக்கு மீண்டும் வலை விரித்த இளைஞர் - பேச மறுத்ததால் கத்தியால் குத்திய கொடூரம்
x
தினத்தந்தி 20 April 2024 7:27 PM GMT (Updated: 20 April 2024 11:17 PM GMT)

கணவரை பிரிந்த காதலியுடன் மீண்டும் பழகி வந்த இளைஞர், திடீரென அவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கணவரை பிரிந்த தன் காதலியுடன் மீண்டும் பழகி வந்த இளைஞர் திடீரென அவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திவிட்டு, போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ டிரைவரான இவர், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்பே வேறொருவருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ள நிலையில், திடீரென கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அப்பெண் கணவரை பிரிந்ததாக கூறப்படுகிறது.

கணவரை பிரிந்த தன் காதலியுடன் அஜித்குமார் மீண்டும் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், திடீரென அப்பெண் அஜித்குமாருடன் பேசுவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த அவர், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே அந்த பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்நிலையத்தில் தானாகவே சரணடைந்த அஜித்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story