தகாத போதை பழக்கம்: காதலனுடன் மது குடித்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு


தகாத போதை பழக்கம்: காதலனுடன் மது குடித்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு
x

போதைக்காளான் அவரது உயிரை பறித்ததா என்பது தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊட்டி,

காதலனுடன் மது குடித்த மாணவி திடீரென இறந்தார். போதைக்காளான் அவரது உயிரை பறித்ததா என்பது தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவரது தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஆகாஷ் பாட்டியுடன் வசித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ரிதி ஏஞ்சல் (19). இவரும், ஆகாசும் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பில் ஒன்றாக படித்ததால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது.

இதற்கிடையே ரிதி ஏஞ்சல் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியிலும், ஆகாஷ் நீலகிரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தனர். காதலர்கள் அவ்வப்போது சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க ரிதி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்தார். அங்கு மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட காதலன் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆன்லைன் மூலம் உணவு முன்பதிவு செய்து வீட்டுக்கு வரவழைத்தார். இதைத்தொடர்ந்து ஆகாசும், ரிதி ஏஞ்சலும் மது அருந்தி உள்ளனர். இதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் அதையும் சேர்த்து சாப்பிட்டு உள்ளனர். இதனால் போதை தலைக்கு ஏறி இருவரும் நிலைகுலைந்து காணப்பட்டு உள்ளனர். பின்னர் 2 பேரும் தூங்கிவிட்டனர்.

காலையில் கண்விழித்து எழுந்த ஆகாஷ், ரிதி ஏஞ்சல் படுக்கையை விட்டு எழாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எவ்வளவோ எழுப்பியும் ரிதி ஏஞ்சல் எழுந்திருக்கவில்லை என்பதால், 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதால் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆகாஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ரிதி ஏஞ்சல் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தகாத போதை பழக்கத்தால், ரிதி ஏஞ்சலின் விதி மாறி உயிர் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story