கோயம்பேட்டில் பரபரப்பு: திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து சாவு


கோயம்பேட்டில் பரபரப்பு: திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து சாவு
x

சென்னை கோயம்பேட்டில் திருண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

சென்னை

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய்ரெட்டி (வயது 21). இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய தோழி ஒருவரின் சகோதரிக்கு, சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்யசாய் ரெட்டி தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார்.

சத்யசாய் ரெட்டி, திருமண மண்டபத்தில் நடந்த கச்சேரியில் இசைக்கப்பட்ட சினிமா பாடல்களுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அப்போது திடீரென நடனம் ஆடி கொண்டிருந்த சத்யசாய் ரெட்டி சுருண்டு விழுந்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரது காதில் இருந்தும் ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சத்யசாய் ரெட்டியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்யசாய் ரெட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், சத்யசாய் ரெட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்யசாய் ரெட்டி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடியபோது அவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story