மக்களவைத் தேர்தலில் காங். தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிடுவேன் - கார்த்தி சிதம்பரம்


மக்களவைத் தேர்தலில் காங். தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிடுவேன் - கார்த்தி சிதம்பரம்
x

தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் பிரதமர் மோடிக்கு என தனி செல்வாக்கு இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

பிரதமர் நரேந்திர மோடி குறித்து நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. மேலும் அந்த கருத்தில் இருந்து நான் பின்வாங்க போவதுமில்லை என்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தெரிவிக்கும் அத்தனைக் கருத்துகளையும் நான் சிந்தித்து சரியானது என உறுதியாக நம்பி சொல்லும் கருத்துகள்தான். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விளக்கம் கேட்டு யாரும் எனக்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை.

அவ்வாறு கடிதம் வந்த பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும். என்னை நோக்கி, உருவாக்கப்பட்ட சர்ச்சைதான். சிவகங்கையில் போட்டியிட தி.மு.க.வினரும், காங்கிரசிலேயே சிலரும் முயற்சிப்பது குறித்து கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற போட்டிகள் இயல்புதான். உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியிலும் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை.

கடந்த தேர்தல் நேரத்திலும் இதேபோலத்தான் கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் கேட்பார்கள். இது இயல்பு. என்னைப் பொருத்தவரை எம்.பி. பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி வேலை செய்திருக்கிறேன். 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சமமாக நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறேன்.

மக்களவையிலும் அரசியல் சார்ந்து பேசியிருக்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். போட்டியிடுவதா வேண்டாமா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என கட்சி முடிவெடுத்து சொல்லும். வரும் மக்களவைத் தேர்தலில் காங். தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிட தயாராக உள்ளேன்.

பிரதமரின் செல்வாக்கு குறித்து கேட்கிறீர்கள். ஆட்சியில் இருந்த ஒருவரின் செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. அதேநேரத்தில் இந்தி பேசாத மாநிலங்களில் செல்வாக்கு குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தி.மு.க. தலைமையிலான- காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.


Next Story