சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது


சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது
x

குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

நீலாங்கரை,

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஒருவர், நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், திருவான்மியூர் பகுதியில் தனது மகள் உள்பட 7 முதல் 10 வயதுடைய 3 சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் 3 பெண் குழந்தைகளையும் சாக்லேட் தருவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மொட்டை மாடியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறி இருந்தார்.

இது குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த நபர் திருவான்மியூர் அருகே திரிந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து குற்றவாளியை இன்று கைது செய்தனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான்(30)யோவான் தாய், தந்தையை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவதும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் கைதான யோவான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயத்தில் வெளியே சொல்லாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் யோவானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story