உணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்


உணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்
x
தினத்தந்தி 20 Jan 2024 9:37 AM GMT (Updated: 20 Jan 2024 10:12 AM GMT)

தன்னுடைய முடியையே பிடிங்கி உணவில் மறைத்து வைத்து அந்த நபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர்,

பூந்தமல்லி அருகே சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாக கூறி வாடிக்கையாளர் பணம் கொடுக்காமல் சென்ற நிலையில் அவர் ஆடிய தில்லுமுல்லு நாடகம் அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள லட்சுமிபுரம் சாலையில் வட மாநில இளைஞர்கள் உணவகம் நடத்தி வருகின்றனர். இங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் ரைஸ், சிக்கன் லாலி பாப் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் உணவில் முடி இருப்பதாக கூறி அவர் தகராறில் ஈடுபட்டதோடு உணவுக்கு பணம் தரமாட்டேன் என்றும் அடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து உணவக ஊழியர்களும் வேறு வழியின்றி அவரிடம் பணம் வாங்காமல் அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து உணவக ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தன்னுடைய முடியையே பிடிங்கி உணவில் மறைத்து வைத்து அந்த நபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story