தீபாவளி பண்டிகை முன்பதிவு: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அரசு பஸ் இருக்கைகள் நிரம்பின


தீபாவளி பண்டிகை முன்பதிவு: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அரசு பஸ் இருக்கைகள் நிரம்பின
x

கோப்புப்படம் 

தமிழகம் முழுவதும் 450 அரசு விரைவு பஸ்களுக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் சென்று கொண்டாட செல்லும் சென்னையில் வசிக்கும் மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், மற்றும் கோவை, சேலம் மார்க்கமாக செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

தீபாவளிக்கு முந்தைய 22, 23 ஆகிய தேதிகளில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கிறார்கள். அரசு விரைவு பஸ்களில் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 450 அரசு விரைவு பஸ்களுக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பெரும்பாலான அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, செங்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக் கூடிய அரசு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பஸ்களில் மட்டுமே இடங்கள் காலியாக இருக்கின்றன.

கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் 250 அரசு விரைவு பஸ்களில் 22, 23 ஆகிய தேதிகளுக்கு இடங்கள் இல்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பகல் நேர அரசு பஸ்களில் மட்டும் தான் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இரவு நேரத்தில் புறப்படக் கூடிய எல்லா பஸ்களும் நிரம்பி விட்டன.

கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லக் கூடிய பஸ்களில் விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது. பகல் நேர பஸ்களில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் மக்கள் வருவார்கள். அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு முடிந்தவுடன் பிற போக்குவரத்து கழக அரசு பஸ்களுக்கும் முன் பதிவு செய்யப்படும் என்றார்.

1 More update

Next Story