தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது - எல்.முருகன் விமர்சனம்


தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது - எல்.முருகன் விமர்சனம்
x
தினத்தந்தி 10 March 2024 9:44 AM GMT (Updated: 11 March 2024 1:59 AM GMT)

இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருட்கள் கடத்துபவர்களாக உள்ளனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபட்டது. ஆனால் தற்போது போதைப்பொருட்கள் கடத்தும் கட்சியாக மாறிவிட்டது. தி.மு.க. முக்கிய நிர்வாகி ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். குஜராத் வழியாக போதைப் பொருள் கடத்துவதை மத்திய அரசு கண்காணித்தன் மூலமே அவை பிடிப்பட்டு வருகிறது, இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருட்கள் கடத்துபவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது.கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற செய்து கொடுக்கவில்லை.

மதுரையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வினர் தீவிரமாக பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.மக்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் என்றார்.


Next Story