திமுகவிடம் 21 தொகுதிகள் கேட்கப்பட்டதா..? தமிழக காங்கிரஸ் விளக்கம்


திமுகவிடம் 21 தொகுதிகள் கேட்கப்பட்டதா..? தமிழக காங்கிரஸ் விளக்கம்
x

கோப்புப்படம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை,

மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மேலிட பார்வையாளர் அஜோய் குமார் அண்மையில் ஆலோசனை நடத்தி இருந்தார். அதில், குறைந்தது 15 இடங்களையாவது கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று பகல் 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழலில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு அறிக்கையில், "2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை.

இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story