மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்


மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்
x

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தி திணிப்பு

இந்திய துணை கண்டத்தின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுக சதித்திட்டமாக காட்சி அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்ற நிலையை திடீரென்று மாற்றி, இந்தியைப் பொது மொழியாக திணிப்பது எதேச்சாதிகாரமானது.

மாணவர்களுக்கு அநீதி

2 நாட்களுக்கு முன்பாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங், செய்தியாளர் சந்திப்பின் போது, அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின், அனைத்து பாடத்துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை அடியோடு பறிக்கக்கூடியதாகவும், சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது.

இந்த நுழைவுத்தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை - சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்த இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து விட்டு, இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக ஏற்கனவே புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. ஆகவே மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பை தி.மு.க. இளைஞர் அணியும் - மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது.

15-ந் தேதி ஆர்ப்பாட்டம்

அலுவல் மொழிச் சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி - தலைவரின் ஆணையேற்று, தி.மு.க. இளைஞர் அணியும் - மாணவர் அணியும் இணைந்து, வரும் 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என அறிவிக்கிறது.

இதில் தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி தோழர்களும் - மாணவர் அணி தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வதோடு, தெற்கில் ஒலிக்கும் நமது கண்டன குரல் செங்கோட்டையில் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட அணிதிரண்டு வாரீர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story