சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா நாட்டில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் வந்த கினியா நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது சூட்கேஸ் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிக எடையுடன் இருந்தது. அந்த சூட்கேசை பிரித்து சோதனை செய்த போது, அதன் அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.3 கோடி மதிப்புள்ள 1 கிலோ 539 கிராம் அம்பெட்டமின் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

அதனை கடத்தி வந்த கினியா நாட்டு வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக அந்த போைத பவுடரை சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை பொருள் கும்பல் யார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story