மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை; மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்


மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை; மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
x

சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவை சோ்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 73). ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவர், அதே பகுதியில் சொந்த வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வந்தார். மேல்தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மகன் காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

பாலசுப்பிரமணியின் மனைவி கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் இறந்து போனார். இதனால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். பாலசுப்பிரமணி வீட்டில் தனியாக இருந்து வந்தார். அவருக்கு சாப்பாடு செய்து கொடுப்பதற்காக பெண் ஒருவரை அவருடைய மகன் வேலைக்கு வைத்திருந்தார்.

இதற்கிடையே நேற்று அதிகாலை பாலசுப்பிரமணி, தனது மகன் ரவிசங்கருக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில் 'தனியாக வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரவிசங்கர், செல்போனில் தந்தையை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. உடனே வீட்டின் மாடியில் வாடகைக்கு இருப்பவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சென்று பார்க்குமாறு கூறினார்.

அதன்படி, அவர்கள் கீழ்தளத்தில் வந்து பார்க்கும் போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் பாலசுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story