தேர்தல் களம் சூடுபிடித்தது: தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்


தேர்தல் களம் சூடுபிடித்தது:  தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 25 March 2024 6:33 AM GMT (Updated: 25 March 2024 1:17 PM GMT)

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மற்ற தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதையடுத்து தமிழக நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 20-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும்.

கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27-ந்தேதி ஆகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில், வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தருமபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் இதேதொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.


Next Story