கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்


கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்

கன்னியாகுமரி

களியக்காவிளை,

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கனரக லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை அருகே கோழிவிளை வழியாக கனரக லாரி ஒன்று கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தது. கோழிவிளை சோதனைச்சாவடி அருகே சென்றபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சேதமடைந்ததுடன் அந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்புகளை சீரமைத்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் மின் வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிமவள லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர்.


Next Story