கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

கொட்டாரத்தில் கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). இவர் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவர் கோவிலில் மின்விளக்கை எரிய வைக்க சுவிட்சை போட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது.

மின்சாரம் தாக்கி சாவு

இதனால் மின்சாரம் தாக்கி பெருமாள் தூக்கி வீசப்பட்டார். இதனை கோவிலுக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெருமாளுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மின்சாரம் தாக்கி கோவில் ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story