ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் - ஓபிஎஸ் தரப்பு...!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் - ஓபிஎஸ் தரப்பு...!
x
தினத்தந்தி 6 Feb 2023 8:31 AM GMT (Updated: 6 Feb 2023 8:32 AM GMT)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் வாபஸ் பெற்றார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இதனை தொடர்ந்து செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால், அதிமுக வேட்பாளர் யார்? என்று குழப்பம் நீடித்து வந்தது.

அதேவேளை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். இந்த ஒப்புதல் படிவம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த வேட்பாளரை பெரும்பாலான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்து கடிதம் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து அந்த கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி சென்றுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்அள் வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெறுவார். இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்' என்று அவர் கூறினார்.


Next Story