நகைக்கடையில் ரூ.9 லட்சம் திருட்டு முன்னாள் ஊழியர் கைது


நகைக்கடையில் ரூ.9 லட்சம் திருட்டு முன்னாள் ஊழியர் கைது
x
சென்னை

பெரம்பூர்,

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி, விற்கும் கடை உள்ளது. இதில் மண்ணடி தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீத் (வயது 44) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அப்துல் கலாம் அசாக் (38) என்பவர் வேலை செய்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். தற்போது அவர், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் முகமது அப்துல் கலாம் அசாக், தான் வேலை பார்த்த நகை கடைக்கு சென்று மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மேலாளர் அப்துல் அஜித், வெளியே சென்றுவிட்டார். அப்போது முகமது அப்துல் கலாம் அசாக், கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.9 லட்சத்தை திருடிச்சென்று விட்டார்.

மீண்டும் கடைக்கு திரும்பி வந்த மேலாளர், கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் கடை ஊழியர் மீது சந்தேகம் இருப்பதாக பூக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் முன்னாள் ஊழியரான முகமது அப்துல் கலாம் அசாக்கை கைது செய்தனர்.


Next Story