ஜி-20 உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்


ஜி-20 உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
x

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

சென்னை,

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை ஞாயிற்றுக்கிழமை(10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.




Next Story