மணலி மண்டலத்தில் குப்பையை தரம் பிரிக்கும் போட்டி; மேயர் பிரியா தொடங்கி வைத்தார்


மணலி மண்டலத்தில் குப்பையை தரம் பிரிக்கும் போட்டி; மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
x

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு 'என் குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் 'குப்பையை தரம் பிரிக்கும் சவால்' என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் மேயர் தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

நேற்று தொடங்கிய இந்த போட்டி அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 8-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக 2 கூடைகளில் தரம் பிரித்து கொடுத்து அதை புகைப்படம் எடுத்து 'பேஸ்புக்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு 8925800864 என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தாலோ, அதே எண்ணில் 'வாட்ஸ் அப்'பில் பதிவிட்டாலோ அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் 3 பேருக்கு டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள், 'என் குப்பை எனது பொறுப்பு' என்ற இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மேயர் பிரியா கேட்டுக் கொண்டார். இதில் வடக்கு மண்டல துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், உதவி கமிஷனர் கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன், நந்தினி மற்றும் அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story