பூந்தமல்லியில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி சாவு


பூந்தமல்லியில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி சாவு
x

அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி (வயது 35). பூந்தமல்லி நகராட்சியில் வருவாய் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்தியா. இவர்களுக்கு ஆரோ (8) என்ற மகனும், வின்சி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை ரவி அவரது மனைவி மற்றும் மகனுடன் நடைபயிற்சிக்கு சென்று விட்டார். நடைபயிற்சி முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது மகள் வின்சி பக்கத்து வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே சிறுமியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி மாடியின் மேல் இருந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், நேற்று காலை வழக்கம்போல் சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 பேரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு நடைபயிற்சிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அழுதுள்ளார். பின்னர் வீட்டின் பின் பகுதியில் உள்ள கதவை திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த நாற்காலியின் மீது நின்று சத்தம் போட்டு அழுதுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறி 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த காவலாளி சிறுமியை மீட்டு மயக்கமாக இருந்ததால் பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி இறந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story