சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!
x
தினத்தந்தி 5 Dec 2023 7:27 PM GMT (Updated: 6 Dec 2023 9:43 AM GMT)

விடுமுறை குறித்த அறிவிப்பு மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் கடந்த 4-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமை) வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் இந்த கல்லூரிகளுக்கு வருகிற 10-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விடுதியில் தங்கி படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடுமுறையை பொறுத்தமட்டில் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

விடுமுறை குறித்த அறிவிப்பை கல்லூரி நிர்வாகங்கள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் தனியார் கலை அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கான நிவாரண மையங்களாக செயல்பட்டு வருகின்றன. நிவாரண மையங்களாக செயல்படும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story