காசோலை மோசடி வழக்கில் மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான கணவன் கைது


காசோலை மோசடி வழக்கில் மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான கணவன் கைது
x

காசோலை மோசடி வழக்கில் மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மல்லானகிரி இந்திரசேனா ரெட்டி (வயது 44). இவருடைய மனைவி மல்லானகிரி பிரவீனா (40). இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலத்தில் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் வங்கியில் இருந்து ரூ.14 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதில் ரூ.13 லட்சத்தை கட்டிய நிலையில் ரூ.94 ஆயிரம் கட்டாமல் இருந்ததால் தனது மனைவியின் பெயரில் வங்கிக்கு காசோலை வழங்கினர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.

இதன் காரணமாக பூந்தமல்லியில் உள்ள தனியார் வங்கி அலுவலகத்தின் சார்பில் பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று பூந்தமல்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அழைத்தபோது மல்லானகிரி இந்திரசேனா ரெட்டி ஆஜரானார்.

பெண்ணுக்கு பதிலாக ஆண் ஆஜராவதை அறிந்த மாஜிஸ்திரேட்டு இதுகுறித்து விசாரித்த போது மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கணவரே இந்த வழக்கில் ஆஜராகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்து ஆஜரான மல்லானகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது புகார் அளித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதன்பேரில் பூந்தமல்லி போலீசார் மல்லானகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது ஆள் மாறாட்டம் செய்தது மற்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story