சாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு: துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை


சாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு: துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை
x

கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவரது மனைவி கலா (27). விவசாயி. இந்த தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டது.

இந்த நிலையில் சிலம்பரசனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான குபேந்திரன் (21) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் முசிறி-துறையூர் சாலையில் உள்ள நான்காவது மைல் அருகே சென்றபோது, துறையூரில் இருந்து குளித்தலை ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குபேந்திரன் காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலா மருத்துவமனைக்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கலா கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்தார்.

இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி கர்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கலாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். சாலை விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story