மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் திறப்பு: இன்று ரெயிலில் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் திறப்பு: இன்று ரெயிலில் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம்

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க, சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரெயிலில் செல்கிறார்.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

இதில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்படுகிறார். இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.

நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.


Next Story