காரனோடையில் சம்பவம்; வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


காரனோடையில் சம்பவம்; வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x

காரனோடையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைதாகினர்.

சென்னை

சோழவரம் அடுத்த காரனோடை லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 25). கூலித்தொழிலாளி. கடந்த 9-ந்தேதி இவர் காரனோடை பஜாரின் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சென்னை அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மாந்தோப்பு சரவணன் (28), பாடியநல்லூர் ராகுல் (25), பெரம்பூர் தினகரன் என்கின்ற தீனா (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்த நிலையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய நாங்கள் தேடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நபர் அவரது நண்பரான சரத்பாபுவுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி இரவு காரனோடை லட்சுமி அம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்த சரத்பாபுவை வழிமறித்து கும்மிடிப்பூண்டி நண்பர் குறித்து மிரட்டி கேட்டோம். அவர் எனக்கு தெரியாது என கூறியதால் ஆத்திரத்தில் குத்தி கொலை செய்தோம் என வாக்குமூலம் கொடுத்தனர்.

பின்னர் சரவணன், ராகுல், தீனா ஆகிய மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story