'இந்தியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் : ஆர்.எஸ்.பாரதி


இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் : ஆர்.எஸ்.பாரதி
x
தினத்தந்தி 16 Feb 2024 7:58 PM GMT (Updated: 16 Feb 2024 9:03 PM GMT)

மோடியின் பொய் பிரசாரம் நாடாளுமன்ற தேர்தலில் எடுபடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

பா.ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர். தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன? வளர்ச்சி என்ன இருக்கிறது என்று பேசுவதற்கு பா.ஜனதாவில் யாருக்கும் தைரியம் இல்லை. தெரு, தெருவாக பொய் பேசுவதற்காகவே அண்ணாமலை இருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு 100 பொய்யையாவது சொல்வார், பொய் சொல்லாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். இந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்கள் யாரையாவது வாழ வைத்திருக்கிறாரா?

மோடி காலையில் ஒரு வேஷம், மாலையில் ஒரு வேஷம் போடுவார். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு ஆடை அணிந்து மோடி ஏமாற்றுகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பா.ஜனதாவிற்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். இது யார் வீட்டு பணம், யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் பணத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை டெல்லியில் மோடி நடத்தி வருகிறார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளுக்கும், எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்கும் அமலாக்கத்துறையை அனுப்புகிறார் மோடி. கடந்த 2016 தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் ரூ.570 கோடி பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணம் யாருடையது என்று விசாரணை செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை யாருடையது என வெளியிடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இது மோடிக்கு சொந்தமான பணம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகத்தை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசின் கடமை. கருப்பு பணம் மீட்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படுமென மோடி அறிவித்து அதனை செயல்படுத்தவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அளித்ததுபோன்று குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வருகிறார். இதுபோன்று கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

10 ஆண்டுகாலத்தில் மோடி அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. விலைக்கு வாங்கப்பட்ட அரசியல்வாதிகளை வைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். மோடியின் பொய் பிரசாரம் இந்த தேர்தலில் எடுபடாது. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான கூட்டணி, இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகம், புதுச்சேரியில் சேர்த்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story