"கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருத்தமற்றது" - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை


கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருத்தமற்றது - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
x

அ.தி.மு.க.வினரைப் போல் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைக்க விரும்பவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவகலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில அ.தி.மு.க.வினரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வினரைப் போல் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைக்க விரும்பவில்லை என்றும், கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருத்தமற்றது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தற்காலிக வெற்றிக்கு, தமிழக எதிர்காலம் குறித்த தனது கனவுகளை அடமானம் வைக்க தனக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story