ஜே.பி.நட்டா, 11-ந் தேதி சென்னை வருகை


ஜே.பி.நட்டா, 11-ந் தேதி சென்னை வருகை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Feb 2024 6:44 PM GMT (Updated: 5 Feb 2024 12:53 AM GMT)

பா.ஜனதா நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகின்றன. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளன. தமிழக பா.ஜனதாவும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் வேகம் காண்பித்து வருகிறது. நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற11-ந்தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்கட்டமாக, சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பா.ஜனதா நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் ஜே.பி.நட்டா பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, சோழிங்கநல்லூர் அல்லது ஒய்.எம்.சி.ஏ ஆகிய பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மேலும், மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண் என் மக்கள் யாத்திரையில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற 11-ந்தேதி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரின் பயண அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story