கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட பெற்றோர் முடிவு


கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு -  ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட பெற்றோர் முடிவு
x
தினத்தந்தி 30 Aug 2022 4:29 AM GMT (Updated: 30 Aug 2022 4:42 AM GMT)

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையின் படி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மாணவர்களை படிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவது தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல எனவும், மாணவியின் தற்கொலை கடிதத்தின்படி யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரதேச பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல உள்ளதாகவும், மேலும் ஸ்ரீமதி மரணம் குறித்து ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story