சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு


சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
x

சதுரகிரியில் நேற்று நடைபெற்ற மகாளய அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு அங்கு தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நேற்று அதிகாலை குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் முடிக்காணிக்கை செலுத்தினர்.சதுரகிரி கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். ஏராளமானோர் தரிசித்தனர்.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாணிப்பாறை அடிவாரப்பகுதி, கோவில் பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகாளய அமாவாசைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story