அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்


அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை

ம.தி.மு.க.வில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை ம.தி.மு.க. கொடியேற்றியும், அண்ணா உருவப் படத்துக்கு புகழ் வணக்கம் செலுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது.

ஜூலை 7-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.

காவிப் படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்னி பாதை திட்டத்தை கைவிட வலியுறுத்துகிறது.

மேலும் கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு. நூல் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசுக்கு இக்கூட்டம் கண்டனம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.

இத்தகைய தீர்மானங்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story