பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தொழிலாளி பலி


பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தொழிலாளி பலி
x

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் சக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியான காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மாமனார் குமார் (58) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்கள் மீண்டும் வையாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சாலையில் சென்றபோது அரக்கோணத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த இருவரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியில் சக்கரவர்த்தி பரிதாபமாக இறந்து போனார். குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து இறந்த சக்கரவர்த்தியின் மனைவி கலையரசி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story