திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை


திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை
x

திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விட்டு மர்மநபர்கள் சென்றனர். எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர்

பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த அங்கா விரைவு ரெயில் நேற்று அதிகாலை 2:25 மணியளவில் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியை கடக்க முயன்றது. அப்போது தண்டவாளத்தில் சிமெண்ட் 2 கற்கள் வைக்கப்படிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ரெயிலை மெதுவாக இயக்கியுள்ளார். எனினும் கற்கள் மீது ரெயில் ஏறியதால் கற்கள் உடைந்து சிதறின. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். ரெயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் சமூக விரோதிகள் சிமெண்ட் கற்கள்களை வைத்ததையும், அதன் மீது ரெயில் என்ஜின் மோதியதில் அந்த கல் சிதறி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே விழுந்ததும் தெரியவந்தது.

ரெயில் என்ஜின் டிரைவர் இதை முன்னதாக கவனிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பேரில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் 10 நிமிடம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.


Next Story